பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.02.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 135

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொருள்:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது

பழமொழி :

It is no use crying over split milk

முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. மழை காலத்திற்கு என்று உணவை சேமிக்கும் எறும்பை போல மாணவ பருவத்திலேயே சேமிக்க பழகுவேன். 

2. கனி தரும் மரங்கள் போல மற்றவர்க்கு எப்போதும் பயன் தர முயற்சிப்பேன்.

பொன்மொழி :

மணிக்கணக்கில் உபதேசம் செய்வதை விட.. ஒரு கணப் பொழுதாவது உதவி செய்வது மேல்.

பொது அறிவு :

1. தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் யார்?

 கலிலியோ

 2. நீர்ம நிலையில் உள்ள உலோகம் எது? 

 பாதரசம்.

English words & meanings :

bland - tasteless food. adjective. Porridge is a bland food. சப்பென்று இருக்கும் ருசியற்ற உணவு . பெயரடை 

ஆரோக்ய வாழ்வு :

தூக்கமானது சரியான நேரத்தில், சரியான அளவில் நமக்கு தினந்தோறும் கிடைக்குமேயானால், உங்களின் மூளையும் சிறந்து விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.



தூக்கம் குறித்த புதிய ஆய்வில், வழக்கமாக நாம் எப்போதும் பிற்பகலில் சிறிது நேரம் தூங்குவதால் நமது மூளையை கூர்மையாகவும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்க முடியும் என தெரிய வந்துள்ளது.  பிற்பகல் தூக்கம் சோம்பேறித்தனம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பகலில் தூங்கினால் மூளையின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கிறது என்பது உண்மை தான்.


பிப்ரவரி 28


தேசிய அறிவியல் நாள்




தேசிய அறிவியல் நாள் (National Science Dayஇந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை

புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு, சகல சாஸ்திரங்களையும் அறிந்த வித்யாசாகர் என்ற ஒரு புலவர் வந்திருந்தார். தம்மை போல் புலமை வாய்ந்தவர்கள் யாரும் இல்லை என ஆணவம் கொண்டிருந்தார். அதனால் ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள புலவர்களை எல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார். 

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராததைக் கண்ட வித்யாசாகர் ஆனவமுற்றார். 


தன் அவையில் சிறந்தவர்கள் யாரும் இல்லையா என இராயருக்கோ வருந்தினார். அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார் என்றார். இதை கேட்டதும் அனைவரும் உற்சாகமாக இருந்தனார். 

அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. மறுநாள் இராமன் ஆஸ்தான பண்டிதரைப் போல் விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். 


இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தார். வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? என்று கேட்டார். இராமன் கம்பீரமாக இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல் என்றார். 

இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்! என்றார். வித்யாசாகருக்கு குழப்பம் இதுவரை எத்தனையோ நூல் படித்திருக்கிறார்! கேட்டிருக்கிறார்! ஆனால் இராமன் கூறியது போல் இந்த நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை.

வித்யாசாகர்கு பயம் ஏற்பட்டது. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் வந்தது. அதனால் வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். 

அன்றிரவு வித்யாசாகர் சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. அதனால் அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார். மறுநாள் அனைவரும் வந்து கூடினார்கள். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. 

அப்பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர். 

மன்னர் இராமனிடம்! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு! என்றார். இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை.


அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. 

இதன் உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார் அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார். 

நீதி :
நமக்கு எல்லாமே தெரியும் என்று ஆணவத்துடன் இருக்கக் கூடாது...

இன்றைய செய்திகள்

28.02. 2023

* 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

* தோட்டக்கலைத் துறையின் முயற்சியால் உதகையில் பூத்த ஹாலந்து துலிப் மலர்கள்.

* தொல்காப்பியம் நூலின் ஒலி வடிவிலான செல்போன் செயலியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

* தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

* விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை நிதியாக ரூ.16 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

* அக்னிபாத் திட்டம் சட்டப்படி செல்லும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

* 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்: துருக்கியில் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்.

* உலக குத்துச்சண்டை தொடர்: இந்தியாவுக்கு 3 வெள்ளிப்பதக்கம்.

* உலக டேபிள் டென்னிஸ் போட்டி கோவாவில் நேற்று தொடங்கியது.

Today's Headlines

* Assembly Speaker Appavu said that Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan is going to present the financial report for the year 2023-24 in the Legislative Assembly on March 20.

* Holland tulips bloomed in Utagai thanks to the efforts of the horticulture department.

* The Central Institute of Classical Tamil Studies has released a mobile application that is an audio version of Tolkappiyam.

 * Chance of rain for 3 days in south coastal districts of Tamil Nadu.

*  Prime Minister Narendra Modi has released Rs.16 thousand crores as the 13th tranche of funds under the Prime Minister's Financial Assistance Scheme for Farmers.

* The Delhi High Court has ruled that the Agnibad project will go ahead according to law.

 * 1.60 lakh buildings have been collapsed due to the earth quake: Construction of houses in Turkey begins.

 * World Boxing Series: 3 silver medals for India.

 * The World Table Tennis Tournament started yesterday in Goa.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

 வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்புவோருக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 3ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், தொழலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இதற்கு மக்களுக்கு நான்கு மாதங்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, நான்கு மாத கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் இணையதளத்தில், அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 3ஆம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இந்த அதிக ஓய்வூதியம் பெற தகுதிபெறுவார்கள்?

ஊழியர்கள் மற்றும் முதலாளிகளில், ஊதிய உச்சவரம்பு ரூ 5,000 அல்லது ரூ 6,500 ஐ விட அதிகமாக சம்பளத்திலிருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு செய்தவர்கள்.

வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக இருந்த போது ஊழியர் மற்றும் முதலாளிகளில் கூட்டு இணைப்பினை பயன்படுத்தாதவர்கள்.

செப்டம்பர் 1, 2014 க்கு முன்பு உறுப்பினர்களாக இருந்த ஊழியர்கள் மற்றும் அந்த தேதியில் அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து உறுப்பினர்களாக இருந்தவர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர்.

அதாவது, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12 சதவீதம் தொழிலாளர் சேமநல நிதியாகப் பிடிக்கப்படும். தனியார் நிறுவனங்களில் இதே தொகை ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் என இரு தரப்பினரிடமிருந்தும் பிடிக்கப்படும். இதில் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் 12 சதவிகிதத்தில் 8.33 சதவிகிதம் தொழிலாளரின் குடும்ப ஓய்வூதியத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும். ஊழயர்களின் பங்கான 12 சதவிகிதம் மற்றும் தொழில் நிறுவனங்களின் 3.5 சதவிகிதம் சேர்ந்து தொழிலாளர் சேமநல நிதிக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு 8.65 சதவிகிதம் வட்டி தரப்படும்.

இநத் திட்டத்தின் கீழ் பயன்பெறவதற்கான குறைந்தபட்ச ஊதியத் தொகை ரூ.6500ல் இருந்து ரூ.15,000 ஆக கடந்த 2014ல் உயர்த்தப்பட்டது.

மேலும், அடிப்படை ஊதியம் 15 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பெறும் தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், ஊதிய உச்சவரம்பின்றி, முழு தொகைக்கும் சேர்த்து 8.33 சதவிகித ஓய்வூதியம் செலுத்தலாம். அதாவது ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் ஊதியமாக பெற்றாலும், 15 ஆயிரம் என்ற வரம்பின்றி, முழு ஊதியத்தையும் கணக்கெடுத்து 8.33 சதவிகிதத்தை ஓய்வூதியத்துக்கு பங்களிக்கலாம்.

எனவே, புதிய அறிவிப்பின்படி, அதிகபட்ச ஓய்வூதியம் பெற பணியாளர்களும், தொழில் நிறுவனங்களும் கூட்டாக விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய நடைமுறை, இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு வேளை, 2014ஆம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பே அதிக ஊதியம் பெற்றவராக இருந்து, ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்து அதை தொழிலாளவர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிராகரித்திருந்தால் அவர்கள் மே 3ஆம் தேதிக்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு முன்னர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேர்ந்தவர்கள், தற்போது பணியில் இருந்து அதிக ஓய்வூதிய வசதியை பெறாமல் இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஒருவேளை இவர்களின் விண்ணப்பங்கள் முன்பு நிராகரிக்கப்பட்டிருந்தாலும் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம்.


இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்

 

இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க விரும்பும் மூத்த குடிமக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. பல்வேறு வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களிலும் ஏராளமான மூத்த குடிமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

அதிகாரிகள் பல விளக்கங்கள் அளித்தாலும் கூட பல்வேறு விடைகாணப்படாத கேள்விகளும் எழுந்துகொண்டேதான் இருக்கின்றன.

அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 3ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அது மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்புக்குப் பிறகு, தங்களுக்கு ஒரு நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பலருக்கும் ஏற்பட்டாலும் கூட, அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, அது தங்களுக்கு பொருந்துமா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

அதாவது,  தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, ஓய்வூதிய பங்களிப்புக்கான அதிகபட்ச ஊதியம் மாதம் ரூ.6,500-இல் இருந்து ரூ.15,000-ஆக அதிகரிக்கப்பட்டது.

மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறுவோா் 1.16 சதவீதம் கூடுதல் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஓய்வூதியத் திட்டத்தில் இணையும் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.15,000-ஆக இருக்க வேண்டுமெனவும் விதிகள் திருத்தப்பட்டன.

ஓய்வூதிய சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களுக்கு எதிராக கேரளம், ராஜஸ்தான், தில்லி மாநில உயா்நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றங்கள், புதிய திருத்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டன. அந்த உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசும், தொழிலாளா் ஓய்வூதிய நிதி அமைப்பும் (இபிஎஃப்ஓ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அனைத்துத் தரப்பு வாதங்களையும் ஆராய்ந்து, தொழிலாளா் ஓய்வூதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும், ரூ.15,000-க்கு அதிகமாக மாத ஊதியம் பெறுவோா் மட்டுமே ஓய்வூதிய நிதியில் இணைய முடியும் என்ற விதியை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். புதிய திருத்தங்கள் தொடா்பாக நிலவிய பல்வேறு குழப்பங்கள் காரணமாக ஓய்வூதிய நிதியில் இணையாத தொழிலாளா்களுக்கு திட்டத்தில் இணைய 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், மாதம் ரூ.15,000-க்கு அதிகமாக ஊதியம் பெறுவோா் கூடுதலாக 1.16 சதவீதம் ஓய்வூதியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற திருத்தத்தையும் நீதிபதிகள் ரத்து செய்தனா். இபிஎஃப்ஓ அமைப்பு கூடுதல் நிதியைத் திரட்டும் நோக்கில், இந்த விதி ரத்தானது 6 மாதங்களுக்கு செல்லாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனா். 6 மாதங்களுக்குத் தொழிலாளா்களிடம் இருந்து கூடுதல் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்த சேமநல வைப்பு நிதியின் கீழ் யார் ஒருவரும் ரூ.3500க்கு மேல் ஓய்வூதியம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்கள், ஆன்லைன் விண்ணப்பித்தல் முறைக்கு மாற்றாக தங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பிரிவினர் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம். முதலில், ஒரு தொழிலாளர் இந்த திட்டத்தில் தற்போது இணைந்திருக்க வேண்டும். பணியில் இருந்து, அதிகபட்ச ஓய்வூதியம் திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். தற்போது இவர்கள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இரண்டாவது, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் ஓய்வு பெற்றவர்கள், தற்போது தொழில் நிறுவனத்துடன் இணைந்து இதில் பயன்பெறலாம்.

மூன்றாவது, 2014ஆம் ஆண்டுக்கு முன்பே ஓய்வு பெற்றிருந்தாலும், அப்போதே இந்த திட்டத்தில் இணைந்திருப்பவர்களும் கூட இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் இணைந்து, முன்கூட்டியே தங்களது பணத்தை எடுத்துவிட்டவர்கள் இதில் சேர முடியாது.

இரண்டாவது, இபிஎஃப்ஓ திட்டத்தில் 2014ம் ஆண்டு செப்டம்பர்மாதத்துக்குப் பிறகு இணைந்தவர்களாலும் இந்த அதிக ஓய்வூதியம் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஒரு தொழிலாளரின் ஊதியம், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான அதிகபட்ச ஊதியத்தை விட அதிகமாக இருந்து, அது எங்கும் குறையாமல் இருந்திருக்க வேண்டும். இதில் தொழிலாளர் மற்றும் தொழில் நிறுவனம் இணைந்து விண்ணப்பிப்பது என்பது ஒரு விதியாக உள்ளது.

எனவே இது முற்றிலும் தொழில் நிறுவனத்தைச் சார்ந்ததாகவே உள்ளது. அதாவது, அதிக ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அதிகபட்ச ஊதியத்தில் 12 சதவிகிதத் தொகையை செலுத்த முன் வர வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் பிஎஃப் தொகையை செலுத்துவதிலிருந்து தப்பிக்கவே நிறுவனங்கள் விரும்புகின்றன. அவ்வாறு இல்லையென்றாலும் அதிகபட்ச ஊதியம் ரூ.15000 என்ற அளவிலேயே நிறுத்தவும் விரும்புகின்றன. எனவே, இதிலிருக்கும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக, அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் அனைவராலும் இதில் இணைய முடியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. 

இதுபோல, கணவர் இறந்துவிட்டால், மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்பட்சத்தில், அவருக்கு இந்த திட்டத்தால் பயனடைய முடியுமா என்ற கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

வருங்கால வைப்பு நிதி இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு செய்ய முன்வந்தாலும் கூட, அவர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் விண்ணப்பிக்கும்போது தேவைப்படுகிறது. இதனை தொழிலாளர்களும் ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவோரும் எப்படி பெறுவார்கள் என்பதும் பதில் கிடைக்காத கேள்வியாகவே உள்ளது.

Click here for latest Kalvi News 

பாடத்திட்டத்தை மேம்படுத்த யு.ஜி.சி., உத்தரவு

 'இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து, பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக, யு.ஜி.சி., சார்பில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


துணிநுால் எனப்படும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் என்பது, துணிகள் தயாரிப்பு மட்டுமின்றி, வேளாண்மை, மருத்துவம், உள்கட்டமைப்பு, தானியங்கி, விண்வெளி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான துணி சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது.


சமீபகாலமாக டெக்ஸ்டைல் துறை, சர்வதேச அளவில், 'டிரெண்ட்'டாக மாறியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதியிலும் பொருளாதார அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் மற்றும் அந்தத் துறை சார்ந்த வளர்ச்சியை மேற்கொள்ள, 1,400 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.


டெக்ஸ்டைல் துறையில், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, வளர்ச்சி, ஊக்குவித்தல், சந்தை மேம்பாடு, ஏற்றுமதி, கல்வி, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில், வளர்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாடத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களை, கல்லுாரிகள், பல்கலைகளில், அதிகம் ஏற்படுத்த வேண்டும்.


இதுகுறித்து, மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள டெக்ஸ்டைல் தொழில்நுட்ப வழிகாட்டு முறைகளை பின்பற்றி, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

 பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, மார்ச் 14; பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதியும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மார்ச் 1ம் தேதியான நாளை மறுநாள் துவங்குகிறது. மாநிலம் முழுதும், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட, 5,000 பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில், செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.


சம்பந்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில், உரிய வகையில் ரசாயன பொருட்களும், ஆய்வக பயன்பாட்டு பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.


அவற்றை பயன்படுத்தி, எந்த முறைகேடும், குளறுபடியுமின்றி, செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.


இந்த செய்முறை தேர்வை, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தொழிற்கல்வி பாடங்கள் உள்ளிட்டவற்றுக்கு, பாட வாரியாக அட்டவணை தயாரித்து, வரும் 9ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


செய்முறை தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறை வழங்கியுள்ள பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். யாரையும் தேர்வு எழுத விடாமல் தடுக்கக் கூடாது.


தேர்வுத்துறையால் சலுகை அறிவிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும், செய்முறை தேர்வு நடத்த வேண்டாம் என்று, தலைமை ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.