பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்த்த ஆய்வு தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குநர் கடிதம்

 மாநில திட்ட இயக்குநர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:




2021-22ம் ஆண்டு 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய மாநிலம் முழுவதும் சிறப்புக் கணக்கெடுப்பு பணி கடந்த 2021 ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெற்றது. இக்கணக்கெடுப்பில் 86 ஆயிரத்து 410 குழந்தைகள் இன்னும் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

இக்குழந்தைகளின் வாழிடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து குழந்தைகள் அனைவரையும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு மீளாய்வுக் கூட்டம் மாநில அளவில் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இது சார்ந்து உண்மையான தகவல்கள் மாநிலத் திட்ட இயக்குநருக்கு தினந்தோறும் சமர்பிக்கப்படுகிறது. மீளாய்வு கூட்டங்களில் இன்னும் சில மாவட்டங்களில் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டிய குழந்தைகள் பற்றிய தற்போதைய நிலையை, கள ஆய்வு செய்து உண்மையான, முழுமையான தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

மேலும் வட்டார அளவில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய தலைமையாசிரியர்கள் மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் உதவியோடு வட்டார சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஒருங்கிணைப்போடு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் ஆய்வு கூட்டம் நடத்தி, பள்ளி செல்லாக் குழந்தைகள் சார்ந்து கள ஆய்வு செய்து உண்மையான தகவல்களை சேகரிக்க ஆவன செய்ய வேண்டும்.

கள ஆய்வில் கிடைக்கப் பெற்ற குழந்தைகளின் தகவல்களை தினந்தோறும் கைப்பேசியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தகவல்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். வட்டார அளவில் பள்ளி செல்லா குழந்தைகளில் கள ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மையான ஆய்வு விவரங்களை ஒவ்வொரு குழந்தைகளின் புகைப்படத்தோடு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்ட பதிவேடு ஒன்றை முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளிகளில் முறையாக சேர்க்கப்பட்ட ஆய்வு தகவல்கள் மற்றும் விவரங்களை ஆவனப்படுத்த வேண்டும். இது சார்ந்த மாவட்ட அளவில், வட்டார அளவில், பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூட்ட அறிக்கைகளை தவறாமல் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும்.

0 Comments:

Post a Comment