பள்ளி மாணவர்களுக்கு வழங்க 5 கோடி புத்தகங்கள் தயார்..!

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2022-23 ம் கல்வியாண்டில் வழங்குவதற்கு 5 கோடியோ 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு அளிப்பதற்காக மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  ஜூன் 13 ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20 ந் தேதியும், 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படும்  போது மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 2022 ம் ஆண்டு திருத்தப்பட்ட பாடப்புத்தங்கள் அச்சிடப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 1 முதல் 7ம் வகுப்பு வரையில் முதல் பருவத்திற்கும், 8 முதல் 12 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு  முழு புத்தகம் என 3 கோடியே 35 லட்சத்து  63 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்டங்களில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 1 கோடியே 83 லட்சத்து 85 ஆயிரம் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும்  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு, 100 அடி வேளச்சேரி - தரமணி இணைவழி சாலை, திருவான்மியூர், சென்னை,  அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம் ஆகிய இடங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment