அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வு தேதிகள் - அமைச்சர் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள் தொடங்கவிருக்கும் தேதிகளை அறிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை  சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம்
வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஜூன் 13ஆம் தேதி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை திட்டமிட்டபடி பள்ளிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பிற்கும், ஜுன் 27ஆம் தேதியன்று 11ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பொது தேர்வுகள் எப்போது?

அடுத்த கல்வியாண்டுக்கான பொது தேர்வுகள், 2023ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி 12ம் வகுப்பிற்கும், 14ஆம் தேதி 11 ஆம் வகுப்புக்கும், ஏப்ரல் 3ஆம் தேதி 10 வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள்  பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும் என்று கூறினார்.


நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


பள்ளி வேலை நேரத்தில் மாற்றம்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதால், அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். அந்த வகையில் மாணவர்கள் காலையில் 8.30 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்றும் 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பாடப்புத்தகங்கள், உள்ளிட்ட இலவச திட்டங்கள் பள்ளி துவங்கிய ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

0 Comments:

Post a Comment