இல்லம் தேடி கல்வி.. கூகுள் செயலி உதவியுடன் 263கோடி சொற்கள் வாசித்து அசத்திய மாணவர்கள்

Reading Marathon: கூகுள் செயலி உதவியுடன் மாணவர்கள் வாசித்த 263 கோடி சொற்கள் வாசிக்கும் திறன் மேம்பட உதவியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 1.81 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை காலத்தில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக 12 நாட்கள் ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டி நடைபெற்றது.

 




சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் ' கூகுள் ரீட் அலாங்க் ' ( Google read along ) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கைபேசி செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை மாணவர்கள் வாசித்து உள்ளனர் .

வாசிப்புப் பழக்கத்தைத் மாணவர்களிடையே ஏற்படுத்திடும் வகையில் இந்த நிகழ்வில் 18.36 லட்சம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் . மாணவர்கள் 12 நாட்களில் 263.17 கோடி சொற்களை சரியாக வாசித்துச் சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மொத்தம் 9.82 லட்சம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்து உள்ளனர்.

இதுகுறித்து, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத்,  தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த சாதனையை செய்வதற்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் , ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மிகப்பெரிய ஊக்க சக்தியாக திகழ்ந்துள்ளதாக தெரிவித்தார் .


413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 லட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் 49.19 லட்சம் மற்றும் மேலூர் வட்டாரம் 41.72 லட்சம் ஆகியவை இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெற்றுள்ளதாக கூறிய அவர்,
நுண்ணறிவு செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வு மாணவர்கள் வாசகங்களை வாசிக்கு திறனை மேம்படுத்தியிருப்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக கூறினார்.

முதலில் சொற்களை வாசிப்பதில் தடுமாற்றமாக இருந்த மாணவர்கள் தற்பொழுது தடையின்றி வாசித்து, பாராட்டுகளை பெற்று வருவதகவும் அவர் தெரிவித்தார்.

0 Comments:

Post a Comment