குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசு.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு..!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், "ஐந்து வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் வகையில் வண்ண 'பேனர்கள் வைப்பதுடன், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதை எடுத்துரைத்து, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கையை, கோடை விடுமுறை இறுதியில், பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடத்த வேண்டும்.

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.

அங்கன்வாடி குழந்தைகளில் ஐந்து வயதானவர்களை கண்டறிந்து அவர்களையும், பள்ளிகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளையும் கண்டறிந்து சேர்க்க வேண்டும்.

ஊக்கப் பரிசு வழங்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று, அரசுப் பள்ளிகளின் சாதனைகள், கட்டமைப்பு வசதிகள், நலத் திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் குறித்து பெற்றோரிடம் எடுத்துக் கூற வேண்டும்.

பள்ளி மேலாண்மை குழு சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம். நூறு சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment