குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடத்தியது. இதன் முடிவுகள், அதே ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம நிா்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதில், மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 209 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை. அதேபோல், கடந்த நவம்பர் 2 முதல் டிசம்பர் 9ம் தேதி வரை நடத்தப்பட்ட தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் நிரப்பப்படவில்லை. இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் என காலியாக உள்ள 430 பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 25-11-2021 அன்று சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment