4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 3. யானைக்கும் பானைக்கும் சரி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 பக்கம் - 19

 வாங்க பேசலாம்

1. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.

 விடை :  மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது. உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்த வழக்கு. ஓர் உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக அரபு வணிகர் ஒருவரிடம் யானையை இரவல் கேட்டார். அவரும் கொடுத்தார். ஊர்வலத்தின்போது யானை இறந்துவிட்டது. அரபு வணிகர் யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார். உழவரோ, “யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டதாகவும், மாற்றாக வேறு யானை வாங்கித் தருவதாகவும் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் வணிகர் ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்,” என்று கூறினார். 

 யானைக்கும் பானைக்கும் சரி உண்மையை அறிந்த மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர் உழவரைத் தனியாக அழைத்து, தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம், “வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்” என்று கூறி அனுப்பி விட்டார். மரியாதை இராமன் கூறியபடி உழவர் செய்தார். வணிகர் உழவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்காக வேகமாக வந்து கதவைத் திறந்தார். பானைகள் விழுந்து உடைந்தன. உழவர் வணிகரிடம், “அப்பானைகள் காலங்காலமாக வைத்திருந்த பழம் பானைகள். இவற்றை உடைத்துவிட்டீரே, எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்,” என்று சத்தமிட்டார். வணிகர் செய்வதறியாமல் திகைத்தார். வணிகர் நடந்ததை மரியாதை இராமனிடம் கூறினார். மரியாதை ராமன் வணிகரிடம் “நீங்கள் இறந்துபோன யானையை உயிருடன் திருப்பிக் கேட்கிறீர். அவர் உடைந்த பழம்பானைகள் வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் பானையைக் கொடுத்தால் அவர் யானையைக் கொடுத்துவிடுவார்” என்று கூறினார். வணிகர் தன்னால் பழைய பானைகளைத் தரமுடியாது என்றார். மரியாதை இராமன் ”உங்களால் திருப்பித் தர முடியாது என்றால் அவரால் மட்டும் எப்படித் திருப்பித் தர முடியும்” என்றார். ஆதலால் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது’ என்று தீர்ப்பளித்தார்.

 சிந்திக்கலாமா?

 உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?

 விடை : நான் அவனைச் சமாதானப்படுத்துவேன். என்ன நடந்திருந்தாலும் அவனிடம் உண்மை கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன். 

 வினாக்களுக்கு விடையளிக்க 

1. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்? 

 விடை : உழவர், தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார். 

 2. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது? 

 விடை :  ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது. 

3. மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்? 

 விடை :  மரியாதை இராமன் உழவரை தனியாக அழைத்து “நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். அவர் வரும்போது உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

 4. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?

 விடை : ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு. 

  பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக

 1. வணிகர் ………………. நாட்டைச் சேர்ந்த வர். 

 விடை : அரபு 

 2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர்…………. 

 விடை :  மரியாதை ராமன்

 3. திருமண ஊர்வலத்தில் …………….. இறந்து விட்டது. 

 விடை : யானை 

 4. பழைய …………. கீழே விழுந்து நொறுங்கின. 

 விடை :  பானைகள்




பக்கம் - 20 
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.

 விடை :


 குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக.  பொருத்தமான தலைப்பிடுக. 

 நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்.

 விடை :  ஒற்றுமையே பலம் ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அவை நான்கும் வலிமையுடன் இருந்தன. அக்காட்டில் வாழ்ந்த சிங்கம் இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து, எப்படியாவது இவைகளைப் பிரித்துவிட வேண்டும் என்று எண்ணியது. 

முதலில் ஒரு எருதைக் கொல்லலாம் என்று சிங்கம் சீறிப் பாய்ந்தது. ஆனால் மற்ற எருதுகள் சேர்ந்து சிங்கத்தைத் தம் கொம்புகளால் குத்தித் தாக்கின. வலியால் துன்புற்ற சிங்கத்திடம் நரி வந்து பேசியது. தந்திரமாக எப்படியாவது நான்கு எருதுகளையும் பிரிப்பதாகக் நரி கூறியது. 

அதேபோல் ஓர் எருதிடம் சென்று “உன் வலிமையால்தான் சிங்கம் பயந்து ஓடியது. மற்ற எருதுகளால் இல்லை ” என்று கூறியது. இதேபோல் ஒவ்வொரு எருதிடமும் கூறியது. எருதுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பிரிந்தன. அச்சமயம் பார்த்து சிங்கம் ஒவ்வொரு எருதாய்க் கொன்றது. எருதுகள் ஒற்றுமையாய் இல்லாததால் கொல்லப்பட்டன. 

  குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?

 விடை :



 கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

1. உழவர், மரியாதை இராமனிடம் என்ன கூறினார்?

விடை : “ஐயா, இரவலாக வாங்கிய யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது, வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?” என்று வருத்தத்துடன் உழவர் கூறினார். 

2. உழவருக்கு மரியாதை இராமன் சொன்ன யோசனை யாது?

விடை :  வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தல். கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்தல். இவற்றைச் செய்தால் போதும் என்று உழவருக்கு மரியாதை இராமன் கூறினார். 

 3. மரியாதை இராமன் என்ன தீர்ப்பு அளித்தார்? 

விடை :  வணிகர் இறந்துபோன தனது யானையைக் கேட்டார். உழவர் உடைந்துபோன பானைகளைக் கேட்டார். இரண்டுமே திரும்பப் பெற முடியாதவை. இறந்துபோன யானை மீண்டும் உயிர்பெற்று வர இயலாது என்பதை மரியாதை இராமன் உணர வைத்தார். யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது என்று அவர் தீர்ப்பு அளித்தார்.

0 Comments:

Post a Comment